மதுரை: தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.20 ஆயிரம் வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் இந்தக் காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித்தடைக்காலம் ஜுன் 14 தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மோர்பண்ணையைச் சேர்ந்த தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.8,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு போதுமானதாக இல்லை.
ஆந்திரா, கோவா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் மீன் பிடி தடைக் காலத்தில் ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. அதேப்போல் தமிழகத்திலும் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில், பிற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என ஆட்சிக்கு வந்துள்ள தவெக தரப்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.
அரசு தரப்பில், மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனக் கூறப்பட்டது. பின்னர் நீதிபதிகள், மனு தொடர்பாக உள்துறை செயலர், நிதித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.