கோப்புப் படம் 

 
தமிழகம்

புதுவை தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தாய், மகள் மீது வழக்கு

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தாய், மகள் மீது நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவாகியுள்ளது.

புதுவை, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் சொந்த ஊருக்கு வந்தனர். அவர்கள் மீண்டும் வெளிநாடு செல்லும்போது கண்காணித்து உரிய விசாரணை நடத்த விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை சர்வதேச விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் விரலில் மை இருந்தவர்களிடம் விசாரித்தபோது பலர் வெளிநாட்டு குடியுரிமையுடன், தமிழ்நாடு, புதுவையில் தங்கள் பழைய வாக்காளர் அட்டையை பயன்படுத்தி தேர்தலில் வாக்களித்தது தெரியவந்தது. அவ்வாறு வாக்களித்தோரை பிடித்து குடியுரிமை அதிகாரிகள் எந்த தொகுதியில் வாக்களித்தார்கள் என கண்டறிந்து வாக்களித்த எல்லையில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

புதுவையில் வெளிநாட்டு குடியுரிமை பெற்று சட்டவிரோதமாக வாக்களித்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற லாஸ்பேட்டை இடையஞ்சாவடியை சேர்ந்த மவுனியம்மாள்(70), அவரின் மகள் ரீனா நந்தினி(45) ஆகியோர் வெளிநாடு செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் சிக்கினர். அவர்கள் மீது நீதிமன்ற உத்தரவின்பேரில் லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT