சென்னை: தேர்தலில் அதிமுக சார்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட தேர்தல் செலவுக்கு வாங்கிய தொகையில் ரூ.4 கோடியை திருப்பித்தராமல் மோசடி செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் டி.தனவிமல், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தல் செலவுக்கு ரூ.5 கோடிகடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தேன்.
அப்போது அதிமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் தேர்தல் செலவுக்கு ரூ.5 கோடி இருப்பதை நிரூபிக்கும் வகையில் அந்த தொகையை தான் சொல்லும் நபரிடம் கொண்டுவந்து தருமாறு கூறினார். வேட்பாளராக பெயர் அறிவிக்கப்பட்டதும் அந்தத் தொகையை திருப்பி தந்துவிடுவேன் எனவும் உறுதியளித்தார்.
அதன்படி அவர் கூறியதுபோல ரூ.4.50 கோடியை கடன் வாங்கி, அவர் கூறிய ஒப்பந்ததாரரான சோத்துப்பாலை முருகேசன் என்பவரிடம் கொடுத்தேன். ஆலங்குடி தொகுதி வேட்பாளராக என்னை கட்சித் தலைமை அறிவித்தது. அதையடுத்து தேர்தல் செலவுக்கு பணம் இல்லாததால் கொடுத்த தொகையை திருப்பித் தரும்படி கேட்டபோது ரூ.50 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தனர். மீதமுள்ள ரூ.4 கோடியை தராமல் இழுத்தடித்து வந்தனர்.
தற்போது விஜயபாஸ்கர் தவெகவுக்கு சென்றுள்ள நிலையில், ஆளுங்கட்சி எனக்கூறி என்னை மிரட்டி வருகிறார். ரூ.4 கோடியை திருப்பித்தராமல் மோசடி செய்யும் நோக்குடன் செயல்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி, புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி.யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே இதுதொடர்பாக விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும், இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.