சென்னை: சென்னை பெருங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தர வடிவேல், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் காசோலை போல போலியான துண்டு்ப் பிரசுரங்களை விநியோகித்து அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு, வாக்காளர்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுகவுக்கு வாக்களித்தால் பணம் கிடைக்கும் என மக்கள் மத்தியில் குறுக்கு வழியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஊழல் நடவடிக்கையாகும். இதை அனுமதித்தால் ஜனநாயகம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும்.
எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.