மானிய விலையில் உணவகம் திறப்பு
புதுச்சேரி: புதுச்சேரி அரசுடன் இணைந்து ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் மானிய விலையில் உணவகம் திறக்கப்பட்டது. இது, விரைவில் 24 மணி நேரமும் செயல்படவுள்ளது.
ஜிப்மர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி அரசு உணவகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து பயனாளர்களுக்கான சேவையை இன்று (பிப்.9) துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், ஜிப்மர் இயக்குநர், டாக்டர் வீர் சிங் நேகி, புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழக (PTDC) இயக்குநர் முரளிதரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இது பற்றி ஜிப்மர் மற்றும் அரசு தரப்பில் கூறும்போது, “ஜிப்மர் வளாகத்தில் அமைந்துள்ள இந்த உணவகம், புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் (PTDC) ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் ஜிப்மர் பணியாளர்களுக்கு குறைந்த விலையில், சுகாதாரமான மற்றும் தரமான உணவு வழங்கும் நோக்கில் இவ்வுணவகம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது இவ்வுணவகம் காலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்படும். விரைவில் 24 மணி நேர சேவையாக விரிவுபடுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் மருத்துவமனை வளாகத்தில் இடையறாத உணவுச் சேவை உறுதி செய்யப்படும். மானிய விலையில் உணவு அனைத்தும் இருக்கும்.
இந்த முயற்சி, ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளுக்கு மிகுந்த பயன் அளிப்பதுடன், உயர்தர சுகாதார மற்றும் தரநிலைகளை பின்பற்றி, புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மூலம் நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.