அரசின் திட்டங்களை பெண்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன்.
திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் வி.ஜி.ராஜேந்திரன், அதிமுக சார்பில் பி.வி.ரமணா, நாம் தமிழர் கட்சி சார்பில் செந்தில்குமார், தமிழக வெற்றி கழகம் சார்பில் அருண்குமார், பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 14 பேர் களத்தில் உள்ளனர்.
திமுக - பட்டா கிடைக்க நடவடிக்கை
திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளதாக கூறுகிறார்.
பலர் பட்டா கேட்டு கோரிக்கை வைக்கின்றனர் பெரும்பாலானோருக்கு நிறைவேற்றியுள்ளேன், மற்றவர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
கடம்பத்தூர் பகுதியில் பிரச்சாரம் செய்த அதிமுக வேட்பாளார் பி.வி.ரமணா.
அதிமுக - இந்தத் தேர்தல் திமுகவுக்கு முடிவுரை எழுதும்
அதிமுக வேட்பாளார் பி.வி.ரமணா கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்தவர் தொகுதிக்கு என எந்த சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றும், வளர்ச்சி பணிகள் எதுவும் செய்யவில்லை என்றும் கூறி வாக்கு சேகரிக்கிறார்.
மேலும், அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும், பலருக்கு பட்டா கொடுக்கவில்லை. இந்த தேர்தல் திமுகவுக்கு முடிவுரை எழுதும் என்றும் ரமணா குற்றம்சாட்டுகிறார்.
துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செந்தில்குமார்.
நாதக-இயற்கை வளங்களை பாதுகாப்பதே முதன்மையான பணி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செந்தில்குமார், தொகுதியில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் என முக்கிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன, நகர்புறங்களில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது.
மேலும், மிகப் பெரிய பிரச்சினையாக மணல் கொள்ளை இருக்கிறது. இயற்கை வளங்களை பாதுகாப்பதே தனது முதன்மையான பணி என்றும், போதை கலாச்சாரத்தை ஒழிப்பதே நோக்கம் என கூறுகிறார்.
திருவள்ளூர் நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தவெக வேட்பாளர் அருண்குமார்.
தவெக-போதையில்லாத தொகுதியாக திருவள்ளூரை மாற்றுவேன்
தவெக வேட்பாளர் அருண்குமார், திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நியமித்து, அனைத்து விதமான சிகிச்சைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
போதையில்லாத முன்மாதிரி தொகுதியாக திருவள்ளூரை மாற்றுவேன் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.