சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, எழில் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஜெ.ஜான் எபினேசர்.
படங்கள்: ம.பிரபு |
தமிழகத்தின் மிகப்பெரிய காசிமேடு மீன்பிடி துறைமுகம் அமைந்திருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஜெ.ஜான் எபினேசர் மீண்டும் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ், தவெக சார்பில் மரிய வில்சன், நாம் தமிழர் கட்சி சார்பில் வெண்ணிலா தாயுமானவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக - தேர்தல் அறிக்கை பிரதானம்
திமுக வேட்பாளர் ஜான் எபினேசர், கொருக்குப்பேட்டை எழில் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். விளையாட்டு வளாகங்கள், ரேஷன் கடைகள் கட்டியது உள்ளிட்ட சாதனைகளை எடுத்துரைத்தார்.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு, ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்கும் ‘இல்லத்தரசி’ திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கூறி களமாடி வருகிறார்.
கொருக்குப்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்.
அதிமுக - சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உறுதி
அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர், மீனாம்பாள் நகர் பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார்.
அதிமுக ஆட்சி அமைந்தால் சட்டம் ஒழுங்கு, பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம், ஃபிரிட்ஜ், மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என வீடு வீடாகச் சென்று வாக்குறுதியளித்து வாக்கு சேகரித்தார்.
தண்டையார்பேட்டை பகுதியில் தொண்டர் களுடன் சென்று வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் வெண்ணிலா தாயுமானவன்.
நாதக - சுற்றுச்சூழல் காக்கப்படும்
நாதக வேட்பாளர் வெண்ணிலா தாயுமானவன், தண்டையார்பேட்டை பகுதியில் நேற்று வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது, சிபிசிஎல், ஐஓசிஎல் போன்ற நிறுவனங்கள் சிறப்பு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சுற்றுச்சூழல் காக்கப்படும். பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்தார்.
காசிமேடு பகுதியில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் என்.மரிய வில்சன்.
தவெக - உயர்கல்வி கனவுகளுக்கு கைகொடுப்போம்
தவெக வேட்பாளர் என்.மரிய வில்சன், பழைய வண்ணாரப்பேட்டை இளைய தெருவில் நேற்று வாக்கு சேகரித்தார்.
பட்டா கிடைக்காதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை, ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத் தடையால் உயர்கல்வி படிக்க முடியாத 100 பேரை உயர் கல்வி படிக்க உதவும் ‘கனவுகளுக்கு கை கொடுப்போம்’ திட்டத்தை செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் பிரதான கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளதால், தேர்தல் களம் அனலாகத் தகிக்கிறது.