தமிழகம்

பணி வரன்முறை செய்யப்பட்ட சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கு முகாம்கள்: தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தொகுப்பூதியத்தில் பணியாற்றி பின்னர் பணி வரன்முறை செய்யப்பட்ட சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி விரைவில் அதற்கான ஆணை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 2004, 2005, 2006-ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 2006 ஜூன் 1 முதல் காலமுறை ஊதியத்தில் பணி வரன்முறை செய்யப்பட்டனர்.

இவ்வாறு பணி வரன்முறை செய்யப்பட்டு 2016 ஜூன் 1-ல் தேர்வு நிலை, 2026 ஜூன் 1-ல் சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்களுக்கு உரிய ஆணை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதை பரிசீலிக்கும் வகையில், கடந்த 1-ம் தேதி சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி, அனைத்து ஆசிரியர்களுக்கும் அதற்கான ஆணை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதில் ஏதேனும் புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT