விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
விழுப்புரம்: தமிழக அரசு கொண்டுவந்த ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டத்தை விமர்சித்து சி.வி.சண்முகம் பேசிய கருத்துகள் சர்ச்சையாகின. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் நேற்று வருத்தம் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதாகக் கூறி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விழுப்புரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, ‘திராவிட மாடல் அரசு’ என்ற பெயரில், தமிழகத்தில் திமுக கொள்ளையடித்துள்ளது.
ஆட்சி முடிந்து போகும்போது உங்கள் கனவை சொல்லுங்கள் என முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். ‘எனக்கு நயன்தாரா வேண்டும், எனது கனவை நிறைவேற்றுவாரா..’ ‘நயன்தாராவை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என ஒருவர் கேட்பார், நிறைவேற்றுவாரா. இவ்வாறு அவர் பேசினார்.
இவரது இந்த சர்ச்சைக் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதன்படி, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகை, பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பாலபாரதி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக சி.வி.சண்முகத்தை கண்டித்து விழுப்புரத்தில் மகளிர் அமைப்பினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உருவ பொம்மையை எரித்தனர். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சி.வி.சண்முகம் அளித்த தகவலில், “தவறுதலாக நயன்தாராவின் பெயர் உச்சரிக்கப்பட்டது. எந்த விதமான உள் நோக்கத்துடன் அவரது பெயரை நான் குறிப்பிடவில்லை. இதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.