சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக சார்பில் முதல்வர் விஜய், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உட்பட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. இதில், தவெக தலைமையில் உருவாகியுள்ள மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பாக மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தவெக தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல்குமார் ஆகியோர் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் ஆதவ் அர் ஜுனா (மதுராந்தகம்), அமைச்சர் அருண்ராஜ் (தாராபுரம்) ஆகியோர் களத்தில் இறங்கி மும்முரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆணையம் தற்போது அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, முதல்வர் விஜய், அமைச்சர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உட்பட 40 பேர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தவெக தலைமை தெரிவித்துள்ளது.
20 நட்சத்திரப் பேச்சாளர்களைக் கொண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த தவெக, வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது. அக்கட்சிக்கு விசில் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்தது. தற்போது இடைத்தேர்தலுக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உட்பட 40 நட்சத்திரப் பேச்சாளர்களை தவெக களமிறக் குவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.