சென்னை: டாஸ்மாக் கடைகள் மூட உரிய கால அவகாசம் வழங்க வலியுறுத்தி, பார் உரிமையாளர்கள், பார் கட்டிட உரிமையாளர்கள் நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் இருக்கும் 717 மதுக்கடைகளை 2 வாரங்களில் மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்த கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.
இதனிடையே 2 வாரங்களுக்குள் கடைகளை காலி செய்வது சாத்தியமில்லை என்றும் உரிய கால அவகாசமும், உரிமையாளர்கள், பணியாளர்கள் போதிய மாற்று ஏற்பாடுகளை வழங்க வலியுறுத்தியும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த பார் உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 2,700 பார்களையும் மூடி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், பார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் என்.அன்பரசன் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளி, கோயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 717 கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் சட்ட விதிப்படிதான் தற்போதைய மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன உச்ச நீதிமன்றம் 50 மீட்டர் என கூறியிருக்கும் நிலையில் 500 மீட்டர் என கூறியிருப்பதால் எந்த மதுபானக் கடைகளும் இயங்க முடியாத சூழல் உருவாகும் என்பதை தமிழக முதல்வருக்கு அதிகாரிகள் எடுத்துக் கூற வேண்டும்.
தற்போது இயங்கி வரும் 717 மதுபானக் கடைகளும் சட்ட விதிமுறைக்குட்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பொறுப்பேற்ற புதிய அரசு, ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலைப்படாமல் இது போன்ற செயல்களை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு எங்கள் கோரிக்கையாக மதுக் கடைகளை மூட கால அவகாசம் வழங்க வேண்டும், இல்லையென்றால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே சங்க பிரதிநிதிகளை நிர்வாக இயக்குநர் நேற்று மாலை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மாலை முதல் பார்கள் மீண்டும் திறக்கப்பட்டன.