பிருந்தா காரத் |கோப்புப் படம்
அதிமுகவின் பின்னால் ஒளிந்துகொண்டு வரும் பாஜக புல்டோசரை தமிழகத்தின் எல்லையிலேயே தடுத்து நிறுத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் நிர்வாகக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.மாரிமுத்துவை ஆதரித்து பிருந்தா காரத் பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு ஆற்றியுள்ள பணிகளின் அடிப்படையில், நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். இங்கு அமைந்துள்ள எங்களது கூட்டணி மிகவும் வலிமையானது.
சந்தேகத்துக்கு இடமின்றி இக்கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும். ஆனால், மறுபுறம் அமைந்துள்ள அதிமுக- பாஜக கூட்டணி என்பது முற்றிலும் சந்தர்ப்பவாத கூட்டணி. அதிகார வேட்கையை தவிர, இவ்விரு கட்சிகளுக்கும் இடையே பொதுவான அம்சம் வேறு என்ன இருக்க முடியும்?
நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்பை தனது புல்டோசர் கொண்டு பாஜக நசுக்கி வருகிறது. துரதிர்ஷ்டவசமாகவும், வன்மையாக கண்டிக்கத்தக்க வகையிலும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், தமிழகத்தின் கலாச்சாரத்துக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டு வரும் பாஜகவை, தமிழகத்தில் காலூன்றுவதற்கு அதிமுக வழிவகை செய்து வருகிறது. இந்த புல்டோசர் அணுகுமுறை இந்தியாவையே சீரழித்து வருகிறது. எனவே, அதிமுகவின் பின்னால் ஒளிந்துகொண்டு வரும் பாஜக புல்டோசரை தமிழகத்தின் எல்லையிலேயே தடுத்து நிறுத்துவதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.