மதுரை: மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை சந்திக்க கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கியதில் பாரபட்சம் பார்க்கப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகையின்போது அவர்களை வரவேற்கவும், வழியனுப்பவும் பாஜக மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்கும் பாஜக நிர்வாகிகள் பட்டியல் கட்சி நிர்வாகிகளிடம் முன்கூட்டியே பெறப்பட்டு டில்லிக்கு அனுப்பப்பட்டு உரிய அனுமதி பெறப்படும்.
பின்னர் அவர்கள் பிரதமர், உள்துறை அமைச்சர் வரவேற்பு, வழியனுப்பும் நிகழ்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். கட்சியில் தீவிரமாக பணிபுரிபவர்கள், நீண்ட நாட்களாகக் கட்சியில் இருப்பவர்கள், இதற்கு முன்பு சந்திக்காதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்நிலையில் மார்ச் 1-ல் பிரதமர் மோடி மதுரைக்கு வந்தபோது உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் கட்சி நிர்வாகிகளின் உறவினர்கள், நண்பர்கள், கட்சிக்கு புதிதாக வந்தவர்கள், நிர்வாகிகள் அல்லாதவர்கள், ஏற்கெனவே சந்தித்தவர்களுக்கு பிரதமரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில், பாஜகவில் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்வதில் குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்பட்டது.
அந்த நடைமுறை காற்றில் பறக்கவிடப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இருப்பதுபோல் கோட்டா முறை பின்பற்றப்படுகிறது. மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் விரும்பும் நபர்கள் பிரதமரை சந்திக்கலாம் என்ற நிலை வந்துள்ளது. கட்சிக்காக உழைப்ப வர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும், என்றனர்.