அண்ணாமலை
சென்னை: “டெண்டர் முறைகேடு, பணியாளர் நியமன ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்” என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “திமுக ஆட்சியில் ஊழல் நடப்பது என்பது பெரிய விஷயம் கிடையாது. ஆனால் தற்போது ஆதாரங்கள் மலைபோல் குவிந்து கிடப்பதால் தமிழக அரசு இதனை தவிர்க்க முடியாது.
அமைச்சர் கே.என்.நேருவின் கீழ் நகராட்சி நிர்வாகத் துறையில் வேலைவாய்ப்புகளுக்கு ரூ.888 கோடி ஊழல் நடந்ததாக கூறப்படும் வேளையில், இதைத்தொடர்ந்து தற்போது ரூ.1,020 கோடி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அமலாக்கத் துறை இது தொடர்பாக 252 பக்க அறிக்கையை டிஜிபியிடம் சமர்ப்பித்துள்ளது. அமைச்சர் நேரு தனது உறவினர்கள் மூலமாக ஒப்பந்ததாரர்களிடம் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இது இந்த மிகப் பெரிய கொள்ளைக்குச் சமம், வாட்ஸ்-அப் சாட், லஞ்ச கணக்கீட்டு பட்டியல், ஹவாலா மூலம் பணமோசடி பற்றிய விவரங்களை அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசில் சிறப்பாக செயல்பட்ட ஒரே துறை, கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் துறை மட்டுமே.
இந்த விவகாரத்தில், இழுத்தடிப்பதை நிறுத்திவிட்டு டெண்டர் முறைகேடு மற்றும் பணியாளர் நியமன ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.