சென்னை: பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடைபெற்ற 49-வது புத்தகக் காட்சியில், ‘கீழைக்காற்று’ பதிப்பகம் சார்பில், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை இழிவுபடுத்தும் வகையில் ஒரு புத்தகம் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த சட்டவிரோதச் செயலைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட பதிப்பகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறை செயலர், சட்டத் துறைச் செயலர், தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு மின்னஞ்சல் வாயிலாகப் புகார் அளித்திருந்தேன்.
மேலும், இதுகுறித்த தகவல்களை எனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, சென்னை காவல் துறையையும் டேக் செய்திருந்தேன். இந்நிலையில் அந்த சட்டவிரோதச் செயலைச் சுட்டிக்காட்டிய எனது எக்ஸ் பக்கத்தை முடக்குவதற்குத் தமிழக சைபர் க்ரைம் பிரிவு முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சைபர் க்ரைம் டிஜிபி சந்திப் மிட்டல், எனது பதிவு ‘இந்தியாவின் இறையாண்மைக்கும், பொது ஒழுங்குக்கும் எதிரானது’ என்று கூறி, தகவல்தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எனது கணக்கை முடக்க எக்ஸ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இது சட்டவிரோதமானது மற்றும் ஒருதலைப்பட்சமானது. உண்மைகளைப் பேசுபவர்களின் குரலை முடக்க நினைக்கும் போக்கைத் தமிழக காவல் துறை உடனடியாகக் கைவிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.