சென்னை: ‘திமுக ஆட்சியில் நடந்ததைப் போலவே தவெக ஆட்சியிலும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன’ என, தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக பாஜக ஊடகப்பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், அக்கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் ரங்கநாயகுலு தலைமையில் சென்னை கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக பாஜக அனைத்து பிரிவுகளின் பொறுப்பாளர் கே.டி.ராகவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாநில, மாவட்ட அளவிலான ஊடகப்பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய கே.டி.ராகவன், “நாட்டின் வளர்ச்சிக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் ஊடகங்களின் பணி மிகவும் முக்கியமானது.
இதனைக் கருத்தில் கொண்டு ஊடகப்பிரிவு நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.
முன்னதாக, கூட்டத்தில், “ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. திமுக ஆட்சியில் நடந்ததைப்போலவே தவெக ஆட்சியிலும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் குறையவில்லை. மக்களிடையே செய்திகளைக் கொண்டு செல்லும் ஊடகங்களுக்கு முழுமையான சுதந்திரம் மற்றும் அனுமதி வழங்க வேண்டும்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக, ஊடகங்களில் பணியாற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.