தமிழகம்

‘தமிழகத்தில் வாக்கு சதவீதம் அதிகரிப்பு, ஆனால்... - தமிழக பாஜக சொல்வது என்ன?

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழகத்தில் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால், பல இடங்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது’ என தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று குதூகலிக்கிறார்கள் சிலர், ஆனால், பல இடங்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது அல்லது அதிக அளவு அதிகரிக்கவில்லை என்பதுதான் உண்மை.

சிறப்பு தீவிர திருத்தம் மிகப்பெரிய சீர்த்திருத்தமாக அமைந்தது என்பதை பிஹார், அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பதிவான அதிக வாக்கு சதவிகிதம் உணர்த்துகிறது.

இறந்து போனவர்கள், இரட்டை வாக்குகளை பெற்றிருந்தவர்கள் என பல லட்சக்கணக்கான பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இந்த சீர்திருத்தத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியில் இந்த சீர்திருத்தம் நடைபெறுவதாகவும் பாஜகவுக்கு சாதகமாகவே இந்த சீர்திருத்தம் அமையும் என்றெல்லாம் புரளி கிளப்பி கொண்டிருந்தனர்.

தற்போது வாக்குப் பதிவு சதவிகிதம் அதிகரித்து விட்டதையடுத்து தங்களுக்கே சாதகமாக அமையும் என்றெல்லாம் பேசுவது அரசியலுக்காக, காழ்ப்புணர்ச்சியோடு, உள்நோக்கத்தோடு இதுநாள் வரை மிகப்பெரும் சீர்திருத்தத்தை எதிர்த்து வந்தார்கள் என்ற உண்மை வெளிவந்திருக்கிறது.

உளவியல் ரீதியாக குறைந்த வாக்குப்பதிவு சதவிகிதம் என்ற மனநிலையில் இருந்து உண்மையான நிலை தற்போது வெளிவந்திருப்பது நன்றே. ஆனால், பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே சீர்திருத்தங்கள் உட்பட அனைத்தையும் எதிர்ப்பதை எதிர்க்கட்சிகள் கைவிட முன்வர வேண்டும்.

நாட்டுக்கு எது தேவை, எப்போது தேவை, ஏன் தேவை, என்பதையெல்லாம் உணர்ந்து பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய அரசியல் கட்சிகள் பொறுப்பற்று நடந்து கொண்டு நேரத்தை வீணாக்கி, மக்களை குழப்பி, சட்ட ரீதியாக எதிர்த்து சுயநலத்தோடு நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT