ஓபிஎஸ் ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தவர் பெங்களூரு வ.புகழேந்தி. ஓபிஎஸ் திமுக-வில் இணைந்த நிலையில், அவர் புரட்சி அதிமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த புகழேந்தி திமுக கூட்டணிக்கு தமது ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புரட்சி அதிமுக என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளேன். அதற்கு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்று, திமுகவு-க்கு எங்களது ஆதரவை தெரிவித்ததுடன் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்வாதகத் தெரிவித்துள்ளேன். என்னுடைய கொள்கை மதவாத சக்திகளுக்கு எதிர்ப்பு தான். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமை தான் சரியானது.
ஜெயலலிதா பாஜக-வுடன் கூட்டணி வேண்டாம் எனக் கூறி வந்தார், ஆனால் தற்போது, பாஜக-வுக்கு அடியமைகளாக பழனிசாமியும், மற்றவர்களும் இருப்பதை பார்க்க முடிகிறது. பழனிசாமியுடன் சேர்ந்தால் ஒருவர் தற்கொலை செய்துகொள்வேன் என்றார். தற்போது, எத்தனை முறை வேண்டுமானாலும் சிறைக்குச் செல்வேன் என்கிறார். இவர்கள் எந்த முகத்தை வைத்து தற்போது ஆதரவு தருகிறார்கள் என்று தெரியவில்லை.
பழனிசாமி தலைமை தொடர்வதால் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறாது. எடப்பாடியிலும் தோல்வி தான். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் திமுக ஆட்சி வெற்றிகரமாக நடக்கப் போகிறது. பழனிசாமி யாருடனும் ஒத்துப் போகாதது தான் இதற்குக் காரணம். 2026 தேர்தலோடு பழனிசாமியின் கதை முடிந்தது, அதிமுக என்ன ஆகும் என தெரியாது. அதனால் தான் புதிய இயக்கம் தொடங்கியுள்ளேன்.
போயஸ் கார்டனில் தேசிய கட்சிகள் காத்திருந்த காலம் மாறி தற்போது டெல்லிக்கு பழனிசாமி சென்று வருகிறார். சிறையில் இருந்து வந்து 9 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு சசிகலா தாமதமாக கட்சி தொடங்கியுள்ளார்.
இனியாவது களத்தில் அவர் பணியாற்ற வேண்டும். மீண்டும் அமைதியாகிவிடக் கூடாது. அதிமுக தொண்டர்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், நாடு முழுவதும் மதவாதத்துக்கு எதிராக என்னுடைய பிரச்சாரம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.