தமிழகம்

டாஸ்மாக் பார்களில் புகையிலை பொருட்கள் விற்க தடை

செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்மாக் பார்களில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மதுக்கூடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

மேலும், பீடி, சிகரெட் போன்றவை விற்க கூடாது. தமிழக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மட்காத, மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களை மதுக்கூடங்களில் பயன்பாட்டில் இருக்கக் கூடாது.

தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன் விலைப் பட்டியலை பார்வைக்கு வைப்பதுடன் அவை சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதாக அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருத்தல் அவசியம்.

தின்பண்ட பொருள்கள், உணவு பொருள் தரக்கட்டுபாட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும். டாஸ்மாக் நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் நேரத்தில் மட்டுமே மதுக்கூடங்கள் செயல்பட வேண்டும்.

நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் வேலை நேரத்தின் போது மட்டுமே ஒப்பந்ததாரருக்கும், பணியாளர்களுக்கும் மதுக்கூடத்தில் அனுமதியளிக்கப்படும்.

டாஸ்மாக் கடையின் விடுமுறை நாட்களிலோ அல்லது நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் வேலை நேரத்துக்கு அப்பாற்பட்டோ மதுக்கூடம் திறந்துவைத்திருந்தால் உடனடியாக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். மேலும், காப்புத் தொகையை திரும்பப் பெற இயலாது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT