சென்னை, விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சபரிநாதன் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட திருவீதி அம்மன் கோயில் சந்திப்பு பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்.
இதனால், அதிர்ச்சியடைந்த கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் அந்த நபரை மடக்கிப் பிடித்த போது. "இது திமுகவின் கோட்டை, இங்கே நீங்கள் நுழையக்கூடாது" எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. வாக்கு வாதம் முற்றிய நிலையில், கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் ராமச்சந்திரனை அந்த நபர் கல்லால் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, தவெக வழக்கறிஞர் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இச்சம்பவத்தில் தொடர்புடைய திமுக நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.