கோப்புப் படம்

 
தமிழகம்

“சண்டைகள் நடக்கும் இடமாக பேரவை இருக்கக் கூடாது” - பிரேமலதா விஜயகாந்த்

செய்திப்பிரிவு

சென்னை: “வெறும் விவாதங்களும் சண்டைகளும் நடக்கும் இடமாக சட்டப்பேரவை இருக்கக் கூடாது” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியது: “சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்காக அவைத் தலைவரிடம் பலமுறை அனுமதி கோரினேன். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.

சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, வெறும் விவாதங்களும் சண்டைகளும் நடக்கும் இடமாக இருக்கக் கூடாது. பழைய வரலாறுகளை பற்றிப் பேசி நேரத்தை வீணடிப்பதை விட, ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பேச வேண்டும்.

போக்குவரத்துத் துறை பெரும் நஷ்டத்தில் இயங்குகிறது. ஆட்டோ தொழிலாளர்களுக்கு 13 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. ஓலா, உபர் போன்ற நிறுவனங்களால் ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டோக்களுக்கு எஃப்சி செய்வதற்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும். அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர் பற்றாக்குறை நிலவுகிறது. 2003-ம் ஆண்டின் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் புதுப்பித்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

அகவிலைப்படி மற்றும் ஓய்வுக்காலப் பலன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குப் பணிமனைகளில் தங்கும் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விருத்தாசலத்திலிருந்து திருப்பதி, பழனி, திருச்செந்தூர் போன்ற ஆன்மீகத் தலங்களுக்கு நேரடி பேருந்து வசதி வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சிப்காட் அமைக்கப்பட வேண்டும். விருதாச்சலத்தில் மூடிக்கிடக்கும் சூரியகாந்தி எண்ணெய் ஆலை, முந்திரி மற்றும் கரும்பு சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக 150 ஏக்கரில் நீர் தேக்கம் அமைக்க வேண்டும். பெண்களுக்கு இலவசப் பேருந்து வசதி என்று கூறினாலும், பல இடங்களில் அது சரியாகச் செயல்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. ஒரே நாளில் 6 கொலைகள் நடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. போதை கலாச்சாரம் பெருகிவிட்டது. இந்த அரசு வெறும் 'போட்டோ ஷூட்' அரசாக மட்டுமே இருக்கிறது.

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவைத் தலைவர் நடுநிலையோடு தான் செயல்படுகிறார். இந்த கூட்டத்தொடர் மக்களுக்கான பயனை அளிக்கவில்லை. வரும் டிசம்பர் மாத கூட்டத்தொடரில் மக்கள் பிரச்சனைகள் குறித்துப் பேச வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT