சென்னை: தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் நிலவும் தாமதத்தால் தான் பல முக்கிய ரயில்வே திட்டங்கள் பின்னடைவை சந்திக்கிறதே தவிர, நிதி பற்றாக்குறையால் திட்டங்கள் தடைபடவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.
தமிழக ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘94 சதவீத நிலங்களைக் கையகப்படுத்தும் பணி முடிக்கப்பட்டு, ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 931 ஹெக்டேர் நிலம் எடுக்க ரயில்வே துறை நிதி ஒதுக்கவில்லை’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதில் அளித்து எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. 2026–27-ம் நிதி ஆண்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், மாநில அரசின் ஒத்துழைப்பின்றிரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டை செயல்படுத்த முடியாது.
செயல்பாட்டில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலத்தில் 24 சதவீதம் மட்டுமே இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதாவது 4,326 ஹெக்டேரில் 1,052 ஹெக்டேர் நிலம் மட்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்த, தமிழக அரசுக்கு ஏற்கெனவே ரூ.1,465 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதில் நிலவும் தாமதத்தால்தான் பல முக்கிய ரயில்வே திட்டங்கள் பின்னடைவை சந்திக்கிறதே தவிர, நிதி பற்றாக்குறையால் திட்டங்கள் தடைபடவில்லை. இதற்கு மாறாக கூறப்படும் எந்த குற்றச்சாட்டும் ஆதாரமற்றது. மதுரை - தூத்துக்குடி (வழி: அருப்புக்கோட்டை) புதிய பாதை திட்டத்துக்கு 91 சதவீத நிலமும், திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை புதிய பாதை திட்டத்துக்கு 86 சதவீதம் நிலமும் கையகப்படுத்தாமல் இன்னும் நிலுவையில் உள்ளது.
ராமேசுவரம் - தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், 6 ஆண்டுகள் ஆகியும், இத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் இன்னும் தொடங்கப்படவில்லை.
ஆனாலும்கூட, தமிழகத்தில் பல புதிய ரயில் பாதைகள், இரட்டைப் பாதைகள், 3, 4-வது பாதை திட்டங்கள் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பொருளாதார, தொழில்துறை வளர்ச்சியை ஆதரிக்க கூடுதல் திறன் விரிவாக்கத்துக்காக விரிவான திட்ட அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014 முதல், தமிழகத்தில் சுமார் 1,350 கி.மீ. புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,386 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளன. இது 97 சதவீதம் ஆகும்.
தமிழகத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டை வேகப்படுத்த மத்திய அரசு தயாராக, உறுதியாக உள்ளது. ஆனால், இத்திட்டங்களை மக்களிடம் விரைவாக சேர்க்க மாநில அரசு உரிய நேரத்தில் ஆதரவும், ஒத்துழைப்பும் அளிப்பது மிக அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.