அர்ச்சனா பட்நாயக்
சென்னை: சோதனைகளின்போது பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருந்தால் பணத்தை உடனே திருப்பித்தர உத்தரவிட்டுள்ளோம் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மார்ச் 30 முதல் ஏப்.6 வரை பொதுவிடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. அப்படி எடுத்துச் செல்லப்படும் பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான ஆவணம் கட்டாயம் தேவை.
சோதனைகளின்போது பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருந்தால் பணத்தை உடனே திருப்பித்தர உத்தரவிட்டுள்ளோம்.
வாக்களிக்கும் இடத்தில் செல்போன்களுக்கு அனுமதி இல்லை. செல்போன்களை வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பாக வைக்க வசதி செய்து தரப்படும். வாக்குச்சாவடி விவரங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழகத்தில், தோதலை முன்னிட்டு 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் முறை பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் வந்ததில் இருந்து இதுவரை ரூ.1.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பரப்புரை செய்யலாம்; ஆன்லைன் மூலம் மட்டுமே பரப்புரைகளுக்கு அனுமதி கேட்கப்பட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.