சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ள 4,724 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய நலவாழ்வு இயக்கத்தின் கீழ் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில், மாவட்ட நலவாழ்வு சங்கங்களின் கீழ்செயல்படும் அனைத்து சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்பப்படவுள்ள 4,724 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் மற்றும் மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்களின் விவரம் ஆகியவற்றை https://nhm.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அடையாளச் சான்று,புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து, அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலருக்கு செப்.25-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.