அண்ணாமலை

 
தமிழகம்

“ரயில்வே திட்டங்கள் தாமதமாக திமுக அரசே காரணம்” - கனிமொழிக்கு அண்ணாமலை பதில்

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதத்துக்கு திமுக அரசே காரணம்’ என கனிமொழி எம்.பி.க்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தமிழகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த உண்மை நிலையை அறியாமல் திமுக எம்.பி. கனிமொழி பேசுகிறார். தமிழகத்தில் தற்போது ரூ.35,701 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், இந்தத் திட்டங்களை செயல்படுத்த தேவையான நிலங்களை விரைவாகக் கையகப்படுத்துவதில் தமிழக அரசு தவறியதால், திட்டங்கள் தாமதத்தைச் சந்தித்து வருகின்றன.

          

மொத்தம் 4,326 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், 2025 டிசம்பர் நிலவரப்படி வெறும் 24 சதவீத நிலமே தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சில ரயில்வே திட்டங்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் கையகப்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற நிலை தேசிய நெடுஞ்சாலை திட்டங்களிலும் காணப்படுகிறது.

தமிழகத்துக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்துவதில், திமுக அரசு திட்டமிட்டு தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் அளவுக்கு மீறிய தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, எந்த ஆதாரமும் இன்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைவிட, ஏற்கெனவே அனுமதி பெற்றுள்ள திட்டங்களை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்துவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்பதைக் குறித்து கனிமொழி தனது சகோதரரிடம் கேட்க வேண்டும்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

முன்னதாக, ‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு அளிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்கினாலும், ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்படுகிறது. இது, மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பாதகமாக அமையும்’ என கனிமொழி எம்.பி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT