அண்ணாமலை

 
தமிழகம்

“வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது” - அண்ணாமலை

செய்திப்பிரிவு

சென்னை: “வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளை சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்று ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் ஆச்சரியப்படும் அளவுக்கு புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது.

தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1,28,934 கடன் சுமை உள்ளது. தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8 சதவீதம், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது. தமிழகத்தின் சொந்த வரி வருவாய் மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2021-22ல் 5.93 சதவீதத்தில் இருந்தது. 2025-26ல் அது 5.45 சதவீதமாக குறைந்துள்ளது.

மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ரூ.3.18 லட்சம் கோடியாக உள்ளது. பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதேநேரம், தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளை சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய, ஒரு ‘செயல்திறன் மிக்க’ ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT