பொள்ளாச்சியில் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநில மாநாடுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
பொள்ளாச்சி: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநில மாநாடு பொள்ளாச்சியில் 12-ம் தேதி நடைபெறுகிறது.
பாஜகவில் இருந்து விலகிய,மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தான் ஏற்கெனவே நடத்திவரும் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் மூலம் மீண்டும் மக்களுக்கான சேவையை வழங்குவேன் என அறிவித்தார். இந்த இயக்கத்தில் சுமார் 19 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இந்நிலையில், “வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநிலமாநாடு ஜூலை 12-ம் தேதிபொள்ளாச்சியிலும் அதற்கடுத்துஜூலை 26-ம் தேதி திருச்செந்தூரி லும் நடைபெறும்” என அண்ணாமலை அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி ஆச்சிபட்டி கொங்குசிட்டி மைதானத்தில் மாநாட்டுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் அண்ணாமலையின் ஆதரவாளர்களான வசந்தராஜன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து வசந்தராஜன் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘தமிழகத்தில் மாற்றத்தைவிரும்பும் மக்கள், அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்துக்கு அதிக அளவில் ஆதரவு அளித்து வருகின்றனர்.
போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதன் ஒருபகுதியாக ‘போதை இல்லா பொள்ளாச்சி’ என்னும் பெயரில், முதல் மாநாட்டை நடத்துகிறோம். 25 ஏக்கரில் மாநாட்டு திடல் அமைக்கும் பணி நடைபெறுகிறது” என்றார்.
அண்ணாமலை அமெரிக்கா பயணம்: இதற்கிடையே, அண்ணாமலை நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். ஜூலை 4-ம் தேதி(நாளை) வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை (பெட்னா) மற்றும் நியூஜெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் 39-வது மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதையடுத்து, 5-ம் தேதி அமெரிக்காவின் நியூ ஜெர்சி, பென்சாக்கன் நகரில் ‘வீ த லீடர்ஸ் - அமெரிக்கா’ அமைப்பு சார்பில் நடைபெறும் ‘தி வாய்ஸ், தி விஷன்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
எதிர்காலத் தலைமுறையை ஊக்குவிக்கும் நோக்கில், ‘மாறுவோம் மாற்றுவோம்’என்ற முழக்கத்துடன் அமையவுள்ள இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு வாழ் தமிழர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.