தமிழிசைக்கு ஆதரவு கோரி பிரச்சாரம் செய்த அண்ணாமலை. படம்: எல் சீனிவாசன்
“தமிழகம் வந்து திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் வெளிமாநில முதல்வர்கள் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக வரவில்லை. தமிழகத்திற்கு பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே வருகிறார்கள்” என, தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் மூத்த தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக தேர்தல் களத்தில் இரண்டு வார காலத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவாக மிகப்பெரிய அலை உருவாகியிருக்கிறது.
அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் திமுக மீது இருக்கும் கோபம் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த திமுகவுக்கு தேர்தலில் தாய்மார்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழகம் வந்து திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பிற மாநில முதல்வர்கள் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக வரவில்லை. தமிழகத்திற்கு பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே வருகிறார்கள்.
ராகுல் காந்தி, ஸ்டாலின் இருவரும் ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்யவில்லை. திமுக கூட்டணி கோவிலில் தேங்காய் உடைக்கும் போது சிதறுவது போல சிதறிக் காணப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்று பழனிசாமி முதல்வராக பதவியேற்பார். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பேசிய தமிழிசை, “முதல்வர் சூப்பர் 6 என்ற சென்னைக்கான வாக்குறுதியை வெளியிட்டுள்ளார். இது சூப்பர் சுருட்டலுக்கான முன்னோட்டம் என்பதை நிச்சயம் மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்றார்.