சென்னை: ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த வாரம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, நேற்று பாமக தலைவர் அன்புமணி 2026-27-ம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்த நிதிநிலை அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல், போதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்தல், அடுத்த 4 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு அரசு வேலை வாய்ப்பு, வேளாண்மையை லாபம் தரும் தொழிலாக மாற்றுதல் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒட்டுமொத்தமாக 380 திட்டங்கள் நிழல் நிதிநிலை அறிக்கையில் இருந்தன. இதன் பின்னர் நிருபர்களிடம் அன்புமணி தெரிவித்ததாவது: 2026-27 நிதியாண்டில் தமிழ்நாட்டின் வருவாய் ரூ.6,71,891 கோடியாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம் வரி அல்லாத வருவாயாக ரூ.2,17,945 கோடி ஈட்ட முடியும்.
தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை சிறப்பு நீதிமன்றம் மூலம் தண்டிக்கும் அதிகாரத்தை லோக் அயுக்தா அமைப்புக்கு வழங்கி, சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு மீண்டும் அனுமதி மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மேகேதாட்டு தொடர்பாக கர்நாடக அரசிடம் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் இல்லாதது. இதனை சட்டப்படி அணுக வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது. தற்போதைய அரசு திமுகவின் ஊழல் மீது கவனம் செலுத்த வேண்டும். அரசு அதிகாரிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை `பிளாக் லிஸ்ட்' செய்ய வேண்டும் என்று கூறினார்.