தனது திருமண நாளில் மகன் அன்புமணியைக் கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதன்மூலம், பாமகவில் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது. ‘இனி நல்லது நடக்கும்’ என அன்புமணி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டார். ஆனால் அவரது விருப்பத்தை மீறி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் பாமக தலைவர் அன்புமணி. இதற்கு பாலமாக இருந்தவர் அவருடைய மனைவியான தருமபுரி எம்எல்ஏ சவுமியா. இதனால், தந்தை - மகன் இடையே விரிசல் ஏற்பட்டது.
2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கூடிய பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனை நியமித்துள்ளதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேஜை மீது மைக்கை தூக்கி வீசி எதிர்வினையாற்றினார் அன்புமணி. இதனால் கோபடைந்த ராமதாஸ், என்னுடைய முடிவை ஏற்பவர்கள் கட்சியில் இருக்கலாம், இல்லையென்றால் செல்லலாம் என்றார். பனையூரில் கட்சி அலுவலகம் செயல்படும், என்னை அங்கு வந்து கட்சி நிர்வாகிகள் சந்திக்கலாம் என ராமதாஸுக்கு அன்புமணி பதிலடி கொடுத்தார்.
மாமல்லபுரத்தில் 2025 சித்திரை மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டிலும் அன்புமணியை புகழாமல், மாநாட்டுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்ததாக கூறி, திருக்கச்சூர் ஆறுமுகத்தை ராமதாஸ் பாராட்டினார். இதனால் தந்தை - மகன் இடையே விரிசல் அதிகரித்தது.
தைலாபுரத்தில் கடந்த 2025 மே 16-ம் தேதி ராமதாஸ் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை 100-க்கும் மேற்பட்டவர்கள் புறக்கணித்தனர். அவர்களை வர விடாமல் அன்புமணி தடுத்துவிட்டார் என்றார் ராமதாஸ். மேலும் அவர், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியின் பதவியில் இருந்து நீக்கி, தனது ஆதரவாளர்களை நியமித்தார்.
தலைமை பண்பு இல்லாதவர், கோபக்காரர், தாய் மீது பாட்டிலை தூக்கி வீசினார், நிர்வாக திறன் இல்லதாவர், மத்திய அமைச்சராக்கியது நான் செய்த பெரிய தவறு, பாஜகவுடன் கூட்டணிக்காக கணவனும், மனைவியும் எனது இரு கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுதனர், பாமக தலைவர் என்ற பதவிக்கு மூடி சூட நாள் குறித்து மருமகள் சவுமியா நெருக்கடி கொடுத்தார் என மிக கடுமையாக மகன் மற்றும் மருமகளை ராமதாஸ் விமர்ச்சித்தார்.
மேலும், பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டேன், என்னுடைய பெயரை அன்புமணி இணைந்து போடக் கூடாது, வேண்டுமென்றால் இனிஷியலை போட்டுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தது பாமக தொண்டர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைக்க, தன்னிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பை பொருட்படுத்தாமல், அன்புமணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தார் பழனிசாமி.
பாமக எனும் கட்சி, கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி வசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்தது. இது ராமதாஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. நீதிமன்ற கதவுகளை தட்டியும் சாதகமான அரசியல் சூழல் ராமதாஸுக்கு ஏற்படவில்லை. திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியும் கைகூடவில்லை. தந்தை, மகன் இருவரும் தனித்தனியாக செயல்பட்டனர். இதனால் வேறு வழியின்றி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன் கூட்டணி அமைத்து சுமார் 40 தொகுதிகளில் களம் கண்ட ராமதாஸ், அனைத்திலும் டெபாசிட் இழந்தார். பல தொகுதிகளில் 4 இலக்க எண்களில் வாக்கு கிடைக்கவில்லை.
அதேநேரத்தில் கிளசரின் போட்டுக் கொண்டு பேத்திகள் அழுவதாகவும், தருமபுரி அதர்மபுரியாக மாறிவிடும் என ராமதாஸின் மிக கடுமையான விமர்சனத்தையும் மீறி சவுமியா அன்புமணி உட்பட 4 பாமக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்.
தேர்தலுக்கு பிறகு அன்புமணியின் கை ஓங்கியது. தைலாபுரத்துக்கு வருவதை பாமகவினர் குறைத்துக் கொண்டனர். யாரையும் சந்திக்காமல் பொது பிரச்சினைகளை கூறி, சில அறிக்கைகளை மட்டும் ராமதாஸ் வெளியிட்டு வந்தார்.
இதற்கிடையில் தந்தை - மகனை மீண்டும் ஒருங்கிணைக்க குடும்ப உறவுகளும், முக்கிய நபர்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்காக ராமதாஸின் திருமண நாள் சரியானதாக இருக்கும் என நாள் குறிக்கப்பட்டது.
அதன்பேரில் ராமதாஸ் - சரஸ்வதி இணையரின் 61-வது திருமண நாளை ஒட்டி, அவர்களிடம் ஆசி பெற தைலாபுரத்துக்கு மனைவி சவுமியா, மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா, இரு மருமகன்கள், பேர பிள்ளைகள் சகிதம் அன்புமணி இன்று (ஜூன் 24) வருகை தந்தார். ஆரத்தி எடுத்து ராமதாஸ் தரப்பினர் வரவேற்றனர்.
ஒன்றரை ஆண்டுகளாக மகனை சந்திப்பதை தவிர்த்து வந்த ராமதாஸ், தற்சமயம் மகனை கண்டதும் கட்டி தழுவினார். இருவரும் கண்ணீர் சிந்தி உள்ளனர். தாயையும் அன்புமணி அரவணைத்தார். மேலும் பேர பிள்ளைகள் மற்றும் கொள்ளு பேர பிள்ளைகளையும் ராமதாஸ் - சரஸ்வதி கொஞ்சி மகிழ்ந்தனர். அப்போது அவர்களது கால்களில் விழுந்து அன்புமணி, சவுமியா உள்ளிட்ட அனைவரும் ஆசி பெற்றனர். ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறும்போது, “அப்பா - அம்மாவின் 61-வது திருமண நாள். இதனால் குடும்பத்துடன் சென்று வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டோம். இனி, நல்லது நடக்கும்” என்றார். ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது பாமகவினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது.
மூத்த மகள் ஸ்ரீகாந்தி அதிருப்தி
பாமக நிறுவனரும் தந்தையுமான ராமதாஸை குடும்பத்துடன் வந்து அன்புமணி சந்தித்தபோது, அவரது இளைய சகோதரி கவிதா உடன் இருந்துள்ளார். ஆனால், மூத்த மகளும் பாமக செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி, அவரது மகன் முகுந்தன் உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர்.
தலைவர் பதவியை தன் வசப்படுத்திக் கொண்டதாக அறிவித்த ராமதாஸ், மகனை செயல் தலைவர் பதவியில் இருக்கலாம் என்றார். இதனை அன்புமணி ஏற்கவில்லை. இதனால் மகனுக்கு வழங்கப்பட்ட செயல் தலைவர் பதவியை பறித்து, மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு ராமதாஸ் வழங்கினார்.
தந்தை - மகன் ஒன்றாக இணைந்தாலும் குடும்பத்தில் உள்ள பிரச்சினை நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருக்கிறது. பாமக செயல் தலைவர் பதவியில் ஸ்ரீகாந்தி இருப்பதால், கட்சியிலும் புகைச்சல் தொடரும் என்பதுதான் நிதர்சனம்.