சேலத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அன்புமணி ஆதரவாளர்கள்.
சேலம்: சேலத்தில் வரும் 29-ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி, அன்புமணி தரப்பினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் வரும் 29-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு பாமக பெயரில் அனுமதி வழங்கக் கூடாது என்று அன்புமணி தரப்பை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தலைமையிலான நிர்வாகிகள், சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கார்த்தி கூறியதாவது: பாமக தலைவர் அன்புமணிதான் என்று நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டவும், தலைமை ஏற்கவும் அன்புமணியைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை.
கட்சியின் சார்பாக எந்த அனுமதியும், பாதுகாப்பும் நாங்கள் கேட்கவில்லை. பாமக பெயரை தவறாகப் பயன்படுத்தி அனுமதி கேட்டால், அது சட்டவிரோதமானது.
பாமகவின் பெயரையோ, கொடியையோ, அடையாளங்களையோ தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் தலைமையில் நடைபெறும் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எதுவும் செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.