பல்லாவரத்தில் நடைபெற்ற பாமக மாணவர் சங்க பொதுகுழு கூட்டத்தில் கட்சித் தலைவர் அன்புமணி தலைமையில் நிர்வாகிகள், மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். படம்:எம்.முத்துகணேஷ்
“வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸை திமுக-வே தோற்கடித்து விடும்” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
பாமக மாணவர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னை அடுத்த பல்லாவரத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மாணவர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி ரதன், தலைவர் விஜயராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை, கஞ்சா, சாராயம் தான் புழக்கத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சாராய ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கடன் இருக்கும் போது, ஓட்டுக்காக ஒவ்வொருவருக்கும் ரூ.5 ஆயிரம் கொடுப்பதற்காக மேலும் ரூ.6 ஆயிரம் கோடி எதற்காக கடன் பெற வேண்டும்?
அங்கன்வாடி ஊழியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க அரசிடம் நிதி இல்லை. ஓட்டுக்காக பணம் கொடுக்க ரூ.6 ஆயிரம் கோடி கடன் எப்படி பெற முடிந்தது? ரூ.5 ஆயிரம் கோடி கல்வி கடனை ரத்து செய்ய கடன் பெறாதது ஏன்? தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோசமான ஆட்சியை தூக்கி எறிய தமிழக மக்கள் அனைவரும் தயாராகி விட்டனர்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. திமுக கூட்டணியை அவர்களே முடித்து விடுவார்கள். காங்கிரஸை திமுக-வே தோற்கடித்துவிடும். பொறுத்திருந்து பாருங்கள். மொழிப் போரைத் தொடங்கியது மாணவர்கள் தான். அதற்கு ஸ்டிக்கர் ஒட்டியது திமுக. 1967-ல் இதை பயன்படுத்திக் கொண்டு தான் ஆட்சிக்கு வந்தார்கள். அன்று முதல் தற்போது வரை திமுக என்ன செய்தது. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்தி, பாமக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க உறுதியேற்போம். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறாமல் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களின் தற்கொலைக்கு காரணம், ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல், மாணவர்களின் கல்வி, அறிவு வளர்ச்சியை சீரழித்தது, படித்த இளைஞர்களின் அரசு வேலை, தனியார் வேலை குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்றவற்றுக்காக திமுக அரசுக்குக் கண்டனம்.
சிறப்பு டெட் தேர்வுகளை நடத்தாமல், 4 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய திமுக அரசின் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். திமுக ஆட்சியின் மீதான ரூ. 6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் அமைக்கவும், தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததற்கு தமிழக மக்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.