சென்னை: “மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து லாஸ்ட் பெஞ்ச் என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்” என பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார்.
சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமீபத்தில் தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது வகுப்பறைக்குச் சென்ற அமைச்சர் கீர்த்தனா அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அமைச்சரின் ஆங்கிலக் கேள்வி புரியாமல், அதற்கு பதிலளிக்க முடியாமல் மாணவிகள் சிலர் திணறியுள்ளனர். அதேவேளையில், சில மாணவிகள் சரியாக பதில் அளித்தன.
அப்போது அமைச்சர் கீர்த்தனா, ‘இதையே லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்' எனக் குறிப்பிட்டு பேசினார். இந்த வீடியோ காட்சிகள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட பதிவில், “தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல. அமைச்சரின் பணியும் அதுவல்ல.
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து லாஸ்ட் பெஞ்ச் என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள்.
மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள். தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்’ எனத் தெரிவித்துள்ளார்.