சென்னை: அரசு ஊழியர்களுக்கு விரைவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதுடன் தற்காலிக ஏற்பாடான 'டேப்ஸ்' ஓய்வூதிய திட்டத்துக்கு உரிய நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கழகத்தின் பொதுச் செயலாளர் சோ.சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகளின் தலைமையில் கடந்த 22 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று போராடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த திமுக அரசு ஜனவரி 9-ம் தேதி ஓர் அரசாணையை வெளியிட்டு, அதில் கடந்த ஜனவரி 1-ம் தேதிக்குள் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை (டேப்ஸ்) அறிவித்தது. புதிதாக அறிவிக்கப்பட்ட டேப்ஸ் திட்டம் பங்களிப்பு ஓய்வு திட்டத்தை விட சற்று மேம்பட்டது என்ற அளவில் பெரும்பாலான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஓரளவு திருப்தி அடைந்தனர்.
ஆனால், இத்திட்டம் அமல்படுத்த விதிமுறைகளை கடந்த அரசு வெளியிடவில்லை. இந்நிலையில், புதிய அரசு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில், டேப்ஸ் திட்டத்துக்கு தகுதியானவர்கள், தாங்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 30 சதவீதத்தை இடைக்கால ஓய்வூதியமாக பெறலாம் எனவும், முழு விதிமுறைகளும் பின்பு வெளியிடப்படும் என குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு தற்போது சமர்ப்பித்துள்ள 2026- 27-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், ஓய்வூதிய நிதிக்கு கடந்த அரசை காட்டிலும் ரூ.14,000 கோடி குறைவாக ஒதுக்கியதற்கு, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் அளித்த விளக்கம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு, கடன் பெறுவதற்கு தமிழக அரசை அனுமதித்தால், டேப்ஸ் திட்டம் அமல்படுத்தப்படும் என நிதியமைச்சர் கூறியிருப்பது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
தவெக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் என எதிர்பார்த்திருந்த நிலையில், டேப்ஸ் திட்டத்தை அமல்படுத்துவதற்கு, மத்திய அரசு தமிழக அரசை கடன் பெற அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் போல் உள்ளது.
எனவே, டேப்ஸ் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் பொருட்டு, உரிய நிதி ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும். அதோடு விரைவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.