சென்னை: தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் ஒரு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மிக முக்கியதினமான நாளை (மே 4) அமையப்போகிறது. தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்ற கூட்டணியாக விளங்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். அதற்கேற்ப கூட்டணி கட்சிகளின் பணி அமைய வேண்டும்.
மக்கள் எதிர்பார்க்கும் வளமான தமிழகம் அமையவும், தங்கு தடையின்றி புதிய ஆட்சி அமையவும் அறிவிப்பு வெளியாக வேண்டுமானால், வாக்கு எண்ணும் இடங்களில் எவ்வித தொய்வுமின்றி நாம் பணியாற்ற வேண்டியது அவசியம்.குறிப்பாக, வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் தவறுகள் நடக்க வாய்ப்பிருந்தால், அவற்றை உடனடியாக அடையாளம் கண்டு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நாளை பணியாற்றும் கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள், மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு எவ்விதத் தடையும் ஏற்படாத வகையில் கண்ணும் கருத்துமாக விழிப்புடன் இருந்து, தங்களின் கடமையை உணர்ந்து பொறுப்போடு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.