முதல்வர் விஜய் | கோப்புப் படம்
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, தவெக அரசு ஏற்பாடு செய்துள்ள தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.
முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, “யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை தவெக அரசு தற்போது கூட்டியிருப்பது, காவிரி பிரச்சினையில் இருந்து மக்களை திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை. இதில் திமுக பங்கேற்காது” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, அதிமுகவும் இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ‘தொகுதி மறுவரையறை குறித்த புதிய மசோதா எதுவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத, அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில், எதற்காக தமிழக முதல்வர் அவசர அவசரமாக எம்.பி.க்கள் கூட்டம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது?
கண்முன்னே நடக்கும் காவிரி - மேகேதாட்டு பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரியுள்ள நிலையில், அவற்றை எல்லாம் உதாசினப்படுத்திவிட்டு இந்த அரசின் முதல்வர், எதற்காக தாக்கல் செய்யப்படாத மசோதாவுக்கு கூட்டத்தை நடத்துகிறார்?
இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லை. விவசாயிகள் கண்ணீருக்கு பதில் சொல்லாமல் இந்த அரசு நடத்தும் மடைமாற்று அரசியல் அரங்கேற்றத்துக்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது’ என்று அதிமுக தெரிவித்துள்ளது.
மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளன. பாமகவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு தமிழக அரசை இந்தக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனவே, இப்போது தொகுதி மறுவரையறை பிரச்சினைக்காக கூட்டப்படும் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தை இக்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
பங்கேற்பு - 20 | புறக்கணிப்பு 37
தமிழகத்தில் தற்போதைய சுழலில் மக்களவை, மாநிலங்களவையில் மொத்தம் 57 எம்.பிக்கள் உள்ளனர். இதில் திமுகவின் 30 எம்.பிக்கள், அதிமுகவின் 4, பாமக, தேமுதிக, மநீமவின் தலா ஒரு எம்.பி என மொத்தம் 37 பேர் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
அதே நேரத்தில் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸின் 12 எம்.பிக்கள், விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தலா 2 எம்.பிக்கள், ஐயுஎம்எல், மதிமுகவின் தலா எம்.பி என மொத்தம் 20 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.