சென்னை: ‘‘எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் எம்ஆர்சி நகரில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவுக்கு ஆதரவு தர பழனிசாமி மறுத்தால் என்ன செய்வது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
தவெகவுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். அப்படி செய்தால் அதிமுக அழிவுப் பாதைக்கு சென்று விடும். மக்களின் பேராதரவு தவெகவுக்கு உள்ளதால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.
அதனால் 3-ல் 2 பங்கு அதாவது சுமார் 32 எம்எல்ஏ.க்களைப் பிரித்து தனி அணியாக தவெகவுக்கு ஆதரவு தரலாம். அதற்கு நிதியுதவி அளிக்க லீமா ரோஸ் உதவுவார் எனவும் அந்த கூட்டத்தில் ஆலோசித்ததாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில், அதிமுக எம்எல்ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
அதில், ‘‘தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் பங்கு பெற்றால், அதிமுக அழிவுப் பாதைக்கு சென்றுவிடும். வெளியில் இருந்து ஆதரவு அளித்தால், தவெக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியாது. ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டியது தானே என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும். அதனால், தவெகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை’’ என்று முடிவெடுத்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ‘‘தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை முற்றிலும் தவறான செய்தி. எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.
புதுச்சேரி பயணம்: அதிமுக வசம் 47 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். தவெக ஆட்சி அமைக்க எம்எல்ஏ.க்கள் சிலருடைய ஆதரவு தேவைப்படுகிறது. தவெக.வில் உள்ள செங்கோட்டையனுக்கு சவால் விட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு பாடம் கற்பிக்க, 32 எம்எல்ஏ.க்களை தவெக பக்கம் இழுக்கலாம். இல்லாவிட்டால், 10 எம்எல்ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்க முயற்சிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
அதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, சட்டப்பேரவையில் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, அதிமுக எம்எல்ஏ.க்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. அதனால் அதிமுக எம்எல்ஏ.க்களை பழனிசாமி நேற்று இரவு புதுச்சேரி அழைத்து சென்றுள்ளார். அங்கு ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமக அன்புமணி ஆலோசனை: பாமகவிடம் தவெக தரப்பு ஆதரவு கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தவெக விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்துக்குப் பின்னர் அன்புமணியிடம், ‘தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘வணக்கம். நன்றி’ என்று பதில் அளித்தார்.