“விஜய் வாங்குவது வெள்ளையா... கருப்பா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு? வருமான வரி எவ்வளவு செலுத்தி இருக்கிறார்?” என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று அண்ணா நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தை தலைநிமிர செய்தவர் அண்ணா. அவருடைய அன்புத் தம்பிகளாக இருப்பது எங்களுக்குப் பெரிய பெருமை. அதிமுக ஆட்சியின் போது அண்ணாவின் அடிச்சுவட்டில் பயணித்து, அவரது கனவை நனவாக்கி உள்ளோம். அவருடைய உருவத்தை அதிமுக-வின் கொடியில் எம்ஜிஆர் பொருத்தினார். அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சிக் கட்டிலில் இருந்து அண்ணாவின் தத்துவங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டது. அன்பே உருவான அண்ணாவின் தம்பிகளாய் நாங்கள் இருப்பது பெரும் பாக்கியம்.
விஜய் வாங்குவது வெள்ளையா, கருப்பா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு? வருமான வரி எவ்வளவு செலுத்தி இருக்கிறார். உயர் நீதிமன்றத்தில்கூட அது தொடர்பாக வழக்கு இருக்கிறது. கருப்பு, வெள்ளை என்றெல்லாம் வாங்குவது சமூகத்துக்குக் கேடு இல்லையா? உண்மையிலேயே கை சுத்தம், ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்றால், நான் இவ்வளவுதான் வாங்கினேன். வரி கட்டியிருக்கிறேன் என்று சொல்ல முடியுமா? விஜய்யால் சொல்ல முடியாது. கருப்பு அதிகம், வெள்ளை குறைவு. இது வரி ஏய்ப்பு இல்லையா?
கரூரில் 41 உயிர்கள் பலியான அன்று இரு தரப்பையும் நான் குற்றம் சாட்டினேன். அந்த உயிர்கள் பலியான சம்பவத்தில் விஜய் மீதும் தப்பு இருக்கிறது. அரசின் மீதும் தப்பு இருக்கிறது. ஆனால் கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லாமல், கட்சியின் மூன்றாமாண்டு கட்சி தொடக்க விழாவில் டான்ஸ் ஆடுகிறார் என்றால், அந்த 41 குடும்பங்கள் எந்த அளவுக்கு மனதளவில் கஷ்டப்படுவார்கள் என்பதை நினைத்து பாருங்கள். 41 பேர் உயிரிழந்ததை பற்றி அவர் ஏதாவது பேசியிருக்கிறாரா?
தவெக-வை பொறுத்தவரை முழுக்க முழுக்க விசில் விசில் விசில். விசிலை எதுக்கு அடிப்பாங்க. ஆபத்தில் இருக்கும்போதுதான் விசில் அடிப்பார்கள். ஹெல்ப் ஹெல்ப் ஹெல்ப்ன்னு, டைட்டானிக் படம் பார்த்தீங்களா. அதன் க்ளைமேக்சில் என்ன செய்வார்கள்... விசில் அடிப்பார்கள். ஆபத்து என்பதால். அந்த வகையில் அவர்களுக்கும் ஆபத்து, கட்சிக்கும் ஆபத்து.
தேர்தலில் போட்டியே அதிமுக-வுக்கும், திமுக-வுக்கும்தான். இவரை கன்சிடரே பண்ண மாட்டாங்க. இவரு வந்து ‘நானும் ரவுடி, நானும் ரவுடி... ஜீப்புல ஏத்துங்க’ன்னா அது எப்படி முடியும்? விஜய் காமெடி செய்கிறார். எங்களை பொறுத்தவரை அதிமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, எங்கள் பொதுச்செயலாளர் முதல்வர் ஆவார். அதிமுக தலைமையில்தான் கூட்டணி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.