தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் |கோப்புப் படம்

 
தமிழகம்

“வெறும் அறிவிப்புகளால் விவசாயம் வளராது” - வேல்முருகன் கருத்து

வெற்றி மயிலோன்

சென்னை: “விவசாயம் என்பது வெறும் அறிவிப்புகளால் வளராது. விவசாயியின் வருமானம் உயர வேண்டும். வெற்று அறிவிப்புகளால் விவசாயிகளை ஏமாற்றக் கூடாது” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசின் 2026–27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட், விவசாயிகளின் உண்மையான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிய ஏமாற்றமளிக்கும் ஆவணமாகவே உள்ளது. அறிவிப்புகள் ஏராளமாக இருந்தாலும், விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உறுதியான நடவடிக்கைகள் இதில் இடம்பெறவில்லை.

நெல், கரும்பு உள்ளிட்ட முக்கிய விளைபொருட்களுக்கு லாபகரமான கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்த அறிவிப்பு இல்லை. விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி, வட்டியில்லாப் பயிர்க்கடன் விரிவாக்கம், உற்பத்திச் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள் போன்ற அடிப்படை கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப வேளாண்மை, டிஜிட்டல் சேவைகள் குறித்து அரசு பெருமையாகப் பேசுகிறது. ஆனால் விதை, உரம், பூச்சிக்கொல்லி, மின்சாரம், தொழிலாளர் பற்றாக்குறை போன்ற விவசாயியின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு கூறாத பட்ஜெட், நிலத்தில் உழைக்கும் விவசாயிக்கு எந்த நம்பிக்கையையும் அளிக்காது.

தமிழக வேளாண்மையின் உயிர்நாடியான காவிரி நீருரிமை, மேகதாது அணை எதிர்ப்பு, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட மாநில உரிமைப் பிரச்சினைகள் குறித்து எந்த வலுவான செயல்திட்டமும் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நீரின்றி வேளாண்மை இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.

இயற்கை வேளாண்மைக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ள அரசு, இயற்கை விளைபொருட்களுக்கு உறுதியான சந்தை, விலை உத்தரவாதம் மற்றும் மாற்றக் கால நிதியுதவி போன்ற முக்கிய அம்சங்களைத் தெளிவுபடுத்தவில்லை.

அதேபோல், சிறு மற்றும் குறு விவசாயிகளைப் பாதுகாக்கும் தனித்துவமான திட்டங்களும் போதுமானதாக இல்லை. பாசன மேம்பாடு, மண் வளப் பாதுகாப்பு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், அவற்றை எப்போது, எவ்வாறு, எந்த மாவட்டங்களில் செயல்படுத்தப் போகிறார்கள் என்பதற்கான கால அட்டவணையும், செயலாக்கத் திட்டமும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

விவசாயம் என்பது வெறும் அறிவிப்புகளால் வளராது. விவசாயியின் வருமானம் உயர வேண்டும், உற்பத்திச் செலவு குறைய வேண்டும், நீர் உறுதி செய்யப்பட வேண்டும், விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.

இந்த அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றத் தவறியுள்ள இந்த வேளாண் பட்ஜெட், விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பட்ஜெட்டாக இல்லை. அறிவிப்புகளை அடுக்கி வைத்திருக்கும் பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.

தமிழக விவசாயிகளின் நலனை உண்மையாகப் பாதுகாக்கும் வகையில் இந்தப் பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்து, விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT