சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள அதிமுக எம்எல்ஏ. சி.வி சண்முகம் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக எம்எல்ஏக்கள். படம்: எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

பழனிசாமிக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி: பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தல்?

அதிமுக தொடர் தோல்வி எதிரொலி

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக தொடர் தோல்வி எதிரொலியாக பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் ஆட்சியமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது.

ஆளும் திமுக 59 இடங்களில் மட்டுமே வென்றது. திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். அதே நேரம் அதிமுகவில், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வென்றாலும், அதிமுக சார்பில் 47 பேர் மட்டுமே வென்றனர். பல தொகுதிகளில் அதிமுக 3-ம் இடத்துக்கு சென்று டெபாசிட் தொகையும் இழந்தது.

அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், கட்சி வளர்ச்சிக்கு ஒருங்கிணைப்பு அவசியம் என வலியுறுத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்திருப்பதையும், எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதையும் அதிமுக தொண்டர்கள் அவமானமாகப் பார்க்கின்றனர். இதற்கு பொறுப்பேற்று பொதுச்செய லாளர் பதவியிலிருந்து பழனிசாமி விலக வேண்டும் என்ற கோஷம் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.

இதற்கிடையே, தவெகவுக்கு ஆதரவு கொடுத்து, ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்பது என்றயோசனையை சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் முன்வைத்தனர். இதற்கு பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதேபோல், தனது தந்தையின் தோல்விக்கு காரணமான தவெக ஆட்சி அமைக்கக்கூடாது என்பதில் உதயநிதி உறுதியாக இருப்பதாகவும், அதனால் திமுக ஆதரவுடன் பழனிசாமியை முதல்வராக்குவது என ஒரு திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதற்கு பழனிசாமி ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைப்பதை அதிமுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவெகவுக்கு ஆதரவளிக்க திட்டம்? இதன் தொடர்ச்சியாக, கட்சித்தாவல் தடை சட்டம் பாயாமல், 3-ல் 2 பங்கு அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவளிப்பது என, சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் 36 எம்எல்ஏக்கள் பங்கேற்றிருந்தனர்.அதன் பிறகு அனைத்து எம்எல்ஏக்களும் புதுச்சேரி அழைத்துச் செல்லப்பட்டு, தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று அனைவரும் சென்னை வந்தனர்.

அதனைத் தொடர்ந்து சென்னையில் நேற்று பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தவெகவுக்கு ஆதரவளிக்க வேண்டும். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும் என்று எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால், தவெக அழைக்காமல் அதிமுக ஆதரவளிப்பது மரியாதையாக இருக்காது. பாஜக கூட்டணியில் இருந்துவெளியேறுவதும் நியாயமாக இருக்காது என பழனிசாமி தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் தனியாக ஆலோசனை நடைபெற்றது. அதில் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பழனிசாமியை விலக வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பழனிசாமி விரைவில் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், விரைவில் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT