தமிழகம்

மாவட்டம்தோறும் முதியோர் இல்லம், திருநங்கைகளுக்கு ஓய்வூதியத் திட்டம்: அதிமுக வாக்குறுதிகள்

தமிழினி

சென்னை: திருநங்கைகள் நலன் கருதி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் கடன் தொகை உயர்வு, தாட்கோ மூலம் ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் கவனம் ஈர்த்துள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சமூக நலன், மாற்றுத் திறனாளி, ஆதிதிராவிடர் மற்றும் முதியோர் நலன் சார்ந்த முக்கிய அம்சங்கள்:

> மாவட்டம்தோறும் முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும். தனியார் மற்றும் சமூக பங்களிப்பு திட்ட நிதியில், தொழில் நிறுவனங்கள் முதியோர் இல்லங்களை அமைக்க ஊக்குவிக்கப்படும்.

> சமுதாயத்தின் ஓர் அங்கமாகத் திகழும் திருநங்கைகள் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் சுயமரியாதையோடு சமுதாயத்தில் வாழவும், அவர்களுக்கு குடியிருக்க வீடு, சுய தொழில் செய்து சுய சம்பாத்தியத்தோடு சொந்தக் காலில் வாழும் வாழ்க்கை ஆகியவற்றுக்கு அடித்தளமான தொழில் செய்ய மானியத்துடன் கூடிய எளிய கடன் வசதி செய்து கொடுத்து, அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். மேலும், திருநங்கைகள் நலன் கருதி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.

          

> கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் கடன் தொகையை குறைந்தபட்சம் ரூ.1,00,000-த்தில் இருந்து ரூ 2,00,000- மாக உயர்த்தி, 50% மானியத்துடன் வழங்கிட வழிவகை செய்யப்படும்.

> மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின்கீழ் இந்து சமய அறநிலைத் துறை சார்ந்த கடைகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

> பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை, கடுமையாக பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் இணைத்து, பராமரிப்பு உதவித் தொகை உயர்த்தி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

> ஒரு கண் பாதிப்புக்கு உள்ளானவர்களை குறைந்த பார்வை உடையவர்களுக்கான பட்டியலில் சேர்த்து மாற்றுத் திறனாளி அடையாள அட்டை மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்படும்.

> ஆட்டிசம் போன்ற பாதிப்புக்குள்ளான அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடு உடைய குழந்தைகளுக்காக அரசு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.

> தாட்கோ மூலம் ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

> ஆதி திராவிடர்களுக்கான கோவில் புதியதாக கட்டுவதற்கு வழங்கப்படும் தொகையை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

> பட்டியலின மக்கள், விருப்பத்தின்பேரில் கிறிஸ்துவத்திற்கு மாறும்போது, ஏற்கெனவே அவர்கள் பெற்று வந்த உரிமைகள், சலுகைகள் மறுக்கப்படாமல் வழங்கும் வகையில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர்களின் உரிமைகளும், சலுகைகளும் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

> ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து சுற்றுச் சுவர் அமைக்கப்படும். மயானம் இல்லாத பகுதிகளுக்கு புதிய மயானம் ஏற்படுத்தித் தரப்படும்.

> ரயில்வே துறையில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த Senior Citizen மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இருந்து வந்த 50% Fare Concession மீண்டும் வழங்க வலியுறுத்தப்படும்.

> முதியோர் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஏதுவாக, தனியாக வசிக்கும் முதியோர் வீடுகளில், காவலர்கள் வந்து செல்லும் பட்ட புத்தகங்கள் பராமரிக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT