சென்னை: சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக சமீபத்தில் பொறுப்பேற்ற சாமுண்டீஸ்வரி, போக்குவரத்து போலீஸாருக்கு ‘வாக்கி-டாக்கி’ மூலம் பல்வேறு ஒழுக்க விதிமுறைகள் மற்றும் பணிக்கான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: சட்டம்-ஒழுங்கு போலீஸாரை விட, பொதுமக்களை அதிகமாக சந்திக்கும் வாய்ப்பு போக்குவரத்து போலீஸாருக்கே உள்ளது.
தற்போது பெரும்பாலானோர் செல்போன் பயன்படுத்துவதால், நல்ல செயல்களையும் தவறான செயல்களையும் உடனுக்குடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர்.
எனவே, பொதுமக்களிடம் போலீஸார் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். சிலர் சீருடையை சுத்தமாக அணியாமல் பணியில் ஈடுபடுவது கவலைக்குரியது. அனைத்து போக்குவரத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மேலும் பெண் போலீஸார் பணியில் இருக்கும் போது நகைகள் அணியக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதை கடைபிடிக்க வேண்டும். மெரினா கடற்கரை காமராஜர் சாலை வழியாக நான் ஒருமுறை சென்றபோது போக்குவரத்து போலீஸ் ஒருவர் சீருடையுடன் கடையில் மீன் வாங்கிக் கொண்டிருந்ததை பார்த்தேன்.
பணியில் இருந்தாலும், பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாலும், சீருடை அணிந்த நிலையில் எந்தக் கடையிலும் பொருட்களை வாங்கக் கூடாது.
சீருடையுடன் பணம் கொடுத்து பொருட்கள் வாங்கினாலும், பொதுமக்கள் அதை இலவசமாக வாங்குவதாக தவறாக கருதும் வாய்ப்பு உள்ளது.
ஒரு போலீஸ்காரரின் தவறான செயல், ஒட்டுமொத்த காவல் துறையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் என்பதால், அனைவரும் தங்களது நடத்தை மற்றும் ஒழுக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த உத்தரவுகளை அனைத்து போக்குவரத்து போலீஸாரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கூடுதல் காவல் ஆணையர் சாமுண்டீஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.