தமிழகம்

“விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் நகரக் கழக செயலாளர் டி.சீனிவாசன் தலைமையில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு நடிகை கவுதமி நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சீனிவாசன், கணிதா சம்பத் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கவுதமி பேசியதாவது: விலைவாசி உயர்வு ஸ்டாலின் அரசின் மிகப்பெரிய சாதனை. பச்சை குழந்தைகள் முதல் வயதான முதியவர் வரை பாதுகாப்பாக இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.

          

போக்சோ வழக்குகள் மட்டும் 6,000-க்கும் மேற்பட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு முறை யான வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை. தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். சாலை வசதிகள் பழனிசாமி காலத்தில் போடப்பட்டது போல் இல்லாமல் தற்போது மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சிறு மழைக்குக் கூட தாக்குப் பிடிக்காத அளவிற்கு சாலைகள் உள்ளது. இளம் தலைமுறையை சீரழிக்கும் விதமாக கஞ்சா போதை விற்பனை தமிழகத்தில் மலிவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது.

திமுகவில் திருட்டுத் தனத்திற்கு முற்றுப் புள்ளியே இல்லாத அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. மக்களின் ரத்தத்தை உறிஞ்சி சாப்பிடும் அளவிற்கு ஊழல் உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப் படவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்து பழனிசாமி முதல்வர் ஆனவுடன் ஸ்டாலின் அரசால் மக்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு நியாயம் கிடைக்கும். மக்கள் அனைவரும் ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்பி, பழனிசாமி முதல்வராக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT