சென்னை: புலி படத்துக்கு சம்பளமாக பெற்ற ரூ.15 கோடியை மறைத்ததற்காகத்தான் நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2016-17-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்த நடிகர் விஜய், அந்த ஆண்டு வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 பெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், வருமானவரித் துறை 2015-ம் ஆண்டு நடிகர் விஜய் வீட்டில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், புலி திரைப்படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை கணக்கில் காட்டாமல் மறைத்திருப்பது தெரியவந்தது.
அதையடுத்து நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமானவரித் துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக நடந்தது.
அப்போது புலி படத்துக்கு சம்பளமாக பெற்ற ரூ.15 கோடியை வருமானமாக கணக்கில் காட்டாததால் தான் நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக வருமானவரித் துறை தரப்பில் கூறப்பட்டது.
இதில் எந்த தவறும் இல்லை. காலதாமதமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூற முடியாது என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, வருமான வரித்துறையின் இந்த வாதத்துக்கு விஜய் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்த விசாரணையை வரும் ஜன.23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.