சென்னை: ‘நான் அரசியலுக்குள் வருவதற்கு என் தாயின் அனுமதி கிடைத்து விட்டது. நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்பதை மக்களாகிய நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும்’, என நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கருத்து கேட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று காணொலி வாயிலாக அவர் பேசியதாவது: திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றால், முதலில் நான் அரசியலுக்கு வரவேண்டும்.
நான் எப்போதும் என் வீட்டில் குழந்தைகளை வளர்ப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது, இதய அறுவை சிகிச்சை மற்றும் கல்வி உதவி என என்னால் முடிந்த சமூக சேவைகளைச் செய்து வந்தேன்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது, அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், என் தாயார் அதற்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில், தற்போதைய தேர்தலில் எனது நண்பர் விஜய்க்கு கிடைத்த மக்கள் ஆதரவைப் பார்த்த பிறகு, என் தாயின் எண்ணம் மாறியது.
‘நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் வெற்றி பெறவைப்பார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது, நீ அரசியலுக்கு போ’ என்றுஅவர் இப்போது பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
‘நான் அரசியலுக்கு வரலாமா? அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா? தாய்க்கு நிகரான என் ரசிகர்களும், மக்களும்தான் பதில் சொல்ல வேண்டும். உங்கள் முடிவுக்காக நான் காத்திருக்கிறேன்.’ இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், அவரது எக்ஸ் தள பதிவில், ‘எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலுக்கு வந்தால், அவருக்குத் துணையாக நின்று, சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருந்தது.
ஆனால், இன்று சூழ்நிலைகள் என்னை அரசியலில் ஈடுபட வேண்டிய ஒரு கட்டத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளன’ என குறிப்பிட் டுள்ளார்.