தமிழகம்

“மத அடையாளத்தை தற்போது விஜய் வெளிப்படுத்துவதன் நோக்கம் என்ன?” - நடிகர் கருணாஸ் கேள்வி

செய்திப்பிரிவு

சிவகங்கை: நடிகராக இருந்தபோது வெளிப்படுத்தாத மத அடையாளத்தை தற்போது வெளிப்படுத்துவதன் நோக்கம் என்ன? என தவெக தலைவர் விஜய்க்கு, சிவகங்கை திமுக வேட்பாளர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கையில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மாவட்டத் தலைநகராக சிவகங்கை இருந்தாலும், காரைக்குடியுடன் ஒப்பிடும்போது வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி யுள்ளது.

அனைத்து வளர்ச்சி கொண்ட நகராக சிவகங்கையை மாற்றுவேன். நான் எந்த சமுதாயத்துக்கும் எதிராக வெறுப்பு அரசியல் செய்ததில்லை.

          

‘நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல; நமக்கு யாரும் தாழ்ந்தவர்கள் அல்ல’ என்ற முறையில்தான் செயல்படுகிறேன்.

‘சின்ன வேடம் எல்லாம் எனக்கு வேண்டாம்; நேரடியாக கதாநாயகன்தான்’ என்று காதல் திரைப்படத்தில் கூறுவது போல, விஜய் நேரடியாக முதல்வராக வர விரும்புகிறார்.

நடிகர் என்ற புகழை மட்டும் வைத்து அரசியலில் வெற்றி பெறமுடியாது. பலாப்பழத்தில் ஈக்கள் மொய்க்கத்தான் செய்யும்.

அதுபோல நடிகர்களுக்கு கூட்டம் கூடத்தான் செய்யும். இத்தனை காலம் விஜய் மக்களுக்காக என்ன செய்துள்ளார் என்பதுதான் முக்கியம். அரசியலில் சாதிக்க அதுவே அளவுகோல்.

நடிகராக இருந்தபோது தனது மத அடையாளத்தை வெளிப்ப டுத்தாதவர், தற்போது ஜோசப் விஜய் என மத அடையாளத்தை வெளிப்படுத்துவதன் நோக்கம் என்ன?.

மேலும், கிறிஸ்தவ மக்களுக்காக போராடி இருக்கிறாரா? பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறாரா? திமுகவை குறை சொல்லியே பெரிய ஆளாக வரப் பார்க்கிறார் அவர். அரசியலில் நான் விஜய்க்கு முன்னோடி.

நான் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். தன்னை பெரிய கதாநாயகனாக கூறும் விஜய், நம்பிக்கை இல்லாமல் 2 இடங்களில் போட்டியிடுகிறார்.

திமுக வெற்றி பெற ஏற்கெனவே செய்ததையும், புதிதாக செய்ய இருப்பதையும் கூறினாலே போதும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT