கோப்புப் படம்

 
தமிழகம்

ஜூலை 3-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி?

ச.கார்த்திகேயன்

சென்னை: வட மேற்கு வங்கக் கடலில் ஜூலை 3-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்தில் இருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வடக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரத்தில் இருந்து 7.6 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூலை 3-ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூலை 2) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 3, 4 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

3-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களிலும், 4-ம் தேதி கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 8 செமீ, வால்பாறையில் 4 செமீ, சின்கோனா, உபாசி, சோலையார், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT