சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் புதிய உச்சமாக 72.68 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," சென்னை மெட்ரோ ரயிலில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 66.07 லட்சம் பேரும், பிப்ரவரி மாதம் 63.69 லட்சம் பேரும், மார்ச் மாதம் 69.99 லட்சம் பேரும், ஏப்ரல் மாதம் 66.85 லட்சம் பேரும், மே மாதம் 72.68 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக மே மாதம் 24-ம் தேதி 2.64 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மே மாதம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 26.76 லட்சம் பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 42.18 லட்சம் பேரும், டோக்கன்களை பயன்படுத்தி 3.61 லட்சம் பேரும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 6218 பேரும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 5,138 பேரும் பயணம் செய்து உள்ளனர்.
ஏப்ரல் மாதத்தைவிட மே மாதம் 5.82 லட்சம் பயணங்கள் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நாளில் இருந்து இது நாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணித்துள்ளனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.