கோவில்பட்டி: அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியினர் கோவில்பட்டியில் உடுக்கை வாசித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும்: கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை ஒழிக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் உடுக்கை வாசித்து நூதன போராட்டம் நடைபெற்றது.
கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.கனி தலைமை வகித்தார். போராட்டத்தில் தமிழ் மாநில கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால், வட்டாரத் தலைவர் கே.பி.அழகர்சாமி, இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் பொன்ராஜ், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், உடுக்கை வாசிப்பாளர் தட்சிணாமூர்த்தி உடுக்கை வாசித்தபடி மது ஒழிப்பு சம்பந்தமான பாடலைப் பாடினார். தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி கோஷமிட்டனர். தங்களது கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினியிடம் வழங்கினர்.