காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 5 தேர்களின் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் அமைந்துள்ள, புகழ்பெற்ற பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலின் பிரம்மோற்சவ விழா மே 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, விநாயகர் உற்சவம், சுப்பிரமணியர் உற்சவம், அடியார்கள் உற்சவம் நடைபெற்று வந்தது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான 5 தேர்கள் தேரோட்டம் நேற்று காலை தொடங்கியது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு செண்பக தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.
பின்னர், தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனைக் காட்டப்பட்டு, நேற்று காலை 5.30 மணியளவில் புதுச்சேரி அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன்குமார், திருநள்ளாறு எம்எல்ஏ பி.ஆர்.சிவா, ஆட்சியர் அ.குலோத்துங்கன், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணைகந்தசாமி தம்பிரான் சுவாமிகள், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.
நான்கு வீதிகளையும் சுற்றி வந்த பின்னர், நேற்று மாலை தேர்கள் மீண்டும் நிலையை வந்தடைந்தன. இதில், காரைக்கால் மற்றும் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தங்க காக வாகனம்: தொடர்ந்து, இரவு செண்பக தியாகராஜ சுவாமி எண்ணெய்க்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்.இன்று (மே 31) இரவு செண்பக தியாகராஜ சுவாமி எண்ணெய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்துக்கு எழுந்தருளல் மற்றும் சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளும் சகோபுர வீதியுலா, நாளை (ஜூன் 1) இரவு தெப்போற்சவம் ஆகியன நடைபெறும். பிரம்மோற்சவ விழாவின்போதும், சனிப்பெயர்ச்சி விழாவின்போதும் மட்டுமே சனி பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.